Thursday, March 24, 2016

Sanathana Dharma and Religion

ரிஷிகளின் ஞானத்தினால் ப்ரகாசிக்கக்கூடிய இந்த பாரத நாட்டில் சேதுவிலிருந்து ஹிமாசலம் வரை, தொன்றுதொட்டு, வேதத்தினால் ஸனாதன தர்மத்தையும் ஆன்மீகத்தையும் பல பண்டிதர்கள் மிளிரும்படி செய்துள்ளனர். வேதாந்தம் ஆன்மீகம் இவைகளைப் படிக்கும் போது நமக்கு பல சந்தேகங்கள் வருகின்றன. குருமுகமாக நாம் அறியும் போது பல விளக்கங்கள் நமக்குக் கிடைக்கின்றன. வேகமாக செயல்படுகின்ற இந்த யுகத்தில் நமக்கு ஆசான இக்காலகட்டத்தில் இருப்பவர் என்பவர் “வலைத்தளம்” ஒன்றே. ஒன்றை அறிய உள்ளே சென்றவுடன் அதில் ஒன்றி,  வெளியே வரமுடியாமல் அதற்குள்ளேயே உழவுதால் இதற்கு வலைத்தளம் என்று ஆயிற்றோ என்னவோ?  
கேள்விகள் மூலமாக நாம் வேதாந்த சித்தாந்தங்களை அணுகினால் நமக்கு ஒரு தெளிவு ஏற்படும். ஆகையினால் இந்தப் பதிவினை கேள்வி பதில் மூலமாக அறிய முயற்சிக்கிறேன்.
ஜகத்குரு என்பவர் யார்?
சங்கராச்சாரியார், ராமானுஜர், ஆனந்த தீர்த்தர் என்ற பெயருடைய மத்வாச்சாரியார் ஜகத்குரு என்று போற்றப்படும் மூவரும் ஆவார்கள். இவர்கள் மூவரும் ஆசாரியத்ரயம் என்று எல்லோராலும் மரியாதையுடனும் பக்தி ஸ்ரத்தையுடனும் பூஜிக்கப்படுகிறார்கள்.
வேதாந்த தத்துவங்கள்?
வேதாந்தங்களில் ப்ரசித்தமாக இருக்கக்கூடிய த்வைத அத்வைத விசிஷ்டாத்வைத தத்துவங்கள் விசேஷமாக மதிப்பிற்குரிய இடத்தை உடையதாய் உள்ளது.
உபநிடதங்கள் பற்றிய விளக்கம்
உபநிடதங்கள்அல்லது உபநிஷத்துக்கள் (Upanaishads) பண்டைய இந்திய தத்துவ  இலக்கியமாகும். இந்து சமயத்தினரின் ஆதார நூல்களின் கீழ் இது வகைப்படுத்தப்படுகிறது. வேங்களில் இவை இறுதியாக வந்தவையாகும் எனவே இவை வேதாந்தம் எனவும் கூறப்படுகின்றன. சமஸ்கிருதத்தில்  எழுதப்பட்ட இவ்விலக்கியத்தில் பெரும்பாலும், யோகம்,  தத்துவம் போன்றவற்றைப் பற்றியே விவாதிக்கப் படுகிறது. பெரும்பாலும் குரு - சீடன் இடையே நடைபெறும் உரையாடலாக இவை அமைந்துள்ளன. இந்து சமய நூல்களில் இவை மிக உன்னதமான மதிப்பு பெற்றவை.
ஐதரேய உபநிடதம் என்றால் என்ன?
ஐதரேய உபநிடதம் ரிக் வேதத்தில் அமைந்துள்ள ஒரே உபநிடதம். இந்த உபநிடதத்திற்கு ஆதிசங்கரர் மற்றும் மத்வர் ஆகியோர் விளக்க உரை எழுதி உள்ளனர். இதுவே மிகப் பழமையான உபநிடதம் ஆகும்.
இந்த உபநிடதம் ’ஐதரேயர்’ என்ற முனிவர் மூலம் வெளிப்பட்டக் காரணத்தினால் ‘ஐதரேய உபநிடதம்’ என்று அழைக்கப்படுகிறது. ’இதரா’ எனும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண்னின் மகனாக பிறந்த காரணத்தினால் இந்த முனிவருக்கு ‘ மகிதாசு ஐதரேயர்’ எனப் பெயராயிற்று. ஐதரேய ஆரண்யகத்தின் ரிஷியும் இவரே.
ஐத்ரேய உபநிடத்திற்கு ஆதிசங்கரர் செய்தது
மற்ற உபநிடதங்கள் போல் அல்லாமல் இந்த உபநிடதம் பத்தி பத்தியாக உள்ளது. இதனால் ஆதிசங்கரர் இந்த உபநிடதத்தை மூன்று அத்தியாயங்களாக பிரித்து முதல் அத்தியாயத்தில் மூன்று பகுதிகளும், இரண்டாம் அத்தியாயத்தில் ஒரு பகுதியும், மூன்றாம் அத்தியாத்தில் ஒரு பகுதியுமாக பிரித்து அமைத்துள்ளார்.
ப்ரக்ஞானம், ஆத்மா என்றால் என்ன
ஆதிசங்கரர் இந்த உபநிடதத்திற்கு மட்டும் நீண்ட முகவுரை எழுதியுள்ளார். ஞான யோகம் மற்றும் சந்நியாசம் குறித்து தனது முகவுரையில் விரிவாக விளக்கியுள்ளார். மேலும் இந்த உபநிடதத்தில் ”ப்ரக்ஞானம் பிரம்மம்” , ”ஆத்மாவை இதம்” எனும் இரண்டு மகா வாக்கியங்கள் அமைந்துள்ளன.
இறைவன்
இறைவன் எந்த ஒரு உதவியும் இன்றி தன்னிடமிருந்த சக்தியால் இந்த உலகை படைத்தார். படைத்த எல்லாவற்றுக்குள்ளும் அவர் ஊடுருவி இருந்தார்.
மனிதனின் பரிமாணம் / ஜீவன்
உடல், உயிர், மனம், பிராணன், ஆன்மா ஆகியவைகளின் தொகுதியே மனிதன் ; அவன் செய்யும் நல்வினை, தீவினைப் பயன்களுக்கேற்ப உடல்களை மாற்றிச் செல்வது ஒரு உயிரின் பயணம்; உயிர் பழைய உடலை விடுவது மரணம்; புதிய உடலை ஏற்றுக்கொள்வது பிறப்பு; உடல் தாயிடமிருந்து கிடைக்கிறது; உயிர் தந்தையின் வழியாக வருகிறது; இதன் பிறகு ஆன்ம  கருவுக்குள் புகுந்து கொள்கிறது; ஒரு பெண் கருவை சுமப்பது முதல் குழந்தை பிறக்கும் வரை நடைபெறும் நிகழ்வுகள் விரிவாக இவ்வுபநிடதத்தில் கூறப்பட்டுள்ளன.
ஆத்மாவைப் பற்றி
நாம் யாரால் பார்க்கிறோமோ, கேட்கிறோமோ, மணங்களை முகர்கிறோமோ, இனிப்பு-கசப்பு என்று எதை என்று எதை உணர்கின்றோமோ அவரே ஆத்மா. உலகின் இயக்கங்கள் கதிரவனால் நடைபெறுகிறது. ஆனால் கதிரவன் எதிலும் நேரிடையாக ஈடுபடுவதில்லை. அவனுடைய முன்னிலையில் தான் எல்லாம் நடைபெறுகிறது. அது போல ஆத்மா  என்பது ஒரு சாட்சியே. ஆத்மா அனைத்தையும் கடந்ததாக இருந்தாலும், எல்லாமாக விளங்குவதும் அதுவே. அந்த ஆத்மாவே புத்தியாகவும், மனமாகவும் விளங்குகிறது. உணர்வு, ஆளும் தன்மை, உலக அறிவு, பகுத்தறிவு, அறிவுக்கூர்மை, மனோதிடம், சிந்தனை ஆற்றல், மனத்தெளிவு, மனக்கலக்கம், நினைவு, உறுதியான புத்தி, தீர்மானம், பிராண சக்தி, ஆசை, இன்ப நுகர்ச்சி என்பவை ஆத்மாவின் பல பெயர்கள். உடல் இயக்கம், மன இயக்கம் இரண்டும் அதுவே. இறுதியாக பிரக்ஞானம் பிரம்ம என்ற மகா வாக்கியத்தின் மூலம், இந்த பிரக்ஞானமே உண்மையில் ஆத்மா அல்லது பிரம்மம், அதனை உணர்ந்தே வாமதேவர் முக்திடைந்தார்.
ஆத்மா ஜீவன் இரண்டைப் பற்றி
ஆத்மா, ஜீவன் இரண்டும் பிரம்மமாக உள்ளது. ஆத்மாவே அனைத்தையும் படைக்கும் தலைவனான இறைவன். பூமி, காற்று, ஆகாயம், நீர், நெருப்பு ஆகிய ஐந்து பஞ்ச பூதங்களும்  ஆத்மாவே. சிறிய உயிரினங்களும் அதுவே. விதைகளும் அதுவே. முட்டையில் தோன்றுபவையும் அதுவே. கருப்பையில் தோன்றுவதும் அதுவே. விதைகளிருந்து முளைப்பதும் அதுவே. அசையும் பொருள், அசையாப் பொருள், பறப்பவை எல்லாம் அந்த ஆத்மாவே. அனைத்தும் அந்த ஆத்மாவால் வழி நடத்தப்படுகின்றன. பிரபஞ்சமே  ஆத்மாவினால் வழி நடத்தப்படுகிறது. ஆத்மாவே அனைத்திற்கும் காரணம். அந்த ஆத்மாவே இறைவன்.
ரிக்வேத சாந்தி மந்திரமே ஐதரேய உபநிடதத்திற்கும் அமைந்துள்ளது
ஓம் வாங்மே மனஸி பிரதிஷ்ட்டிதாமனோ மே வாசிபிரதிஷ்ட்டிதம் I
ஆவிராவீர்ம ஏதி I வேதஸ்ய ஆணீஸ்த: I ச்ருதம் மே மா ப்ரஹாஸீ: I
அனேனாதீதேனாஹோ ராத்ரான் ஸந்ததாமி I ரிதம் வதிஷ்யாமி I
சத்யம் வதிஷ்யாமி I தன்மாமவதுதத்வக்தாரமவது I
அவது மாமவது வக்தாரமவது வக்தாரம் I
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: II
பொருள்:
எனது வாக்கு, மனதில் நிலைபெறட்டும். மனம், வாக்கில் நிலைபெறட்டும். ஒளிமயமான பரம்பொருளே! நீ என்னுள் ஒளிர்வாயாக. மனமே, வாக்கே நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து வேதங்களின் உண்மையை எனக்குக் அருள்வீர்களாக. என்னால் கேட்கப்படுகின்றவை என்னை விட்டு விலகாதிருக்கட்டும். நான் கற்றவற்றைப் பகலும் இரவும் சிந்திப்பேனாக. நான் உலகியல் உண்மைகளைச் அறிவேனாக. பிரம்மத்தைப் பற்றிய உண்மையை அறிவேனாக. அந்த இறைவன் என்னைக் காக்கட்டும். எனது குருவையும் காக்கட்டும். எனக்கும் குருவுக்கும் ஆரோக்கியத்தை தர வேண்டும். சீடனாகிய எனக்கு (வேதத்தை) நன்கு கேட்கும் சக்தியும், குருவுக்கு அதனை நன்கு கற்றுத்தரும் சக்தியும் அருள வேண்டும். ஓம் சாந்தி சாந்தி சாந்தி”.
வேதாந்த சாத்திரங்கள் கேட்கும் போது நமக்கு வரும் தடைகளான சூழ்நிலைகளிலிருந்து வரும் தடை, இயற்கையிலிருந்து வரும் தடை, நம்மிடருந்து நமக்கே வரும் தடை ஆகிய மூன்று தடைகளை அமைதிப் படுத்துவதின் மூலம் நம்மை நாம் காத்துக்கொள்வதற்கு இறைவனிடம் வேண்டுவதே சாந்தி மந்திரம சொல்வதின் உட்பொருள்.

...............................மேலும் வளரும் 

No comments:

Post a Comment