Friday, January 30, 2015

Tale of Tulasi & Jalandara

துளசி என்ற மருத்துவத் தாவரத்தின் வ்ருத்தாந்தம், தேவ லோகத்தின் அரசனான இந்திரனிடமிருந்து தொடங்குகிறது.
தன்னை எவரும் ஒருகடவுளாக மதிப்பதில்லை என்பதே இந்திரனின் கவலை, படைப்புக்கு அதிபதியான ப்ரும்மாவிடமும் காக்கும் கடவுளான நாராயணனிடமும் தனது வல்லமையைக் காட்ட சிறிதே அச்சம். அழிக்கும் தொழிலுக்கு அதிபதி சர்வேஸவரன் என்று தவறாக எண்ணி ஹரனை வம்புக்கு இழுக்க நினைந்து, தனது வல்லமையில் இறுமாப்பு அடைந்து கைலையை அடைந்தான். சர்வ வல்லமைப் படைத்த சிவபிரான் இதனை அறிந்து, இந்திரனுடன் சிறிதே விளையாட தனது திருவிளையாடலை துவக்கினார். 
தன்னுடைய சிறிய அம்சத்தை ஒரு காவலாளியாக மாற்றி இந்திரனை கைலாய வாயிலில் எதிர் கொண்டு அழைத்தார். வேகமாக உள்ளே செல்ல நினைத்த இந்திரனைத் தடுத்து அவனுடன் சண்டை சச்சரவுக்கு தொடங்கினார். தனது சக்தியில் செருக்கு கொண்ட இந்திரன் கைலாயத்தினுள்ளே செல்லமுடியாததால், கோபம் கொண்டு, தனது வஜ்ராயுதத்தை சிவனின் அம்சமான காவலாளியின் மீது ப்ரயோகம் செய்தான். சாம தான பேத தண்டம் என்ற நான்கும் அவரிடம் வேலை செய்யாத போது, சிவனின் சக்தியை உணர்ந்தான். அதற்குள் சிவனின் ரௌத்ரம் ஒரு தீப்பிழம்பாக வெளிவர, இந்திரன் தான் செய்த செயலுக்கு வருந்தி அஞ்சி, தனது தவறை உணர்ந்து அவர் பாத கமலங்களில் சரண் அடைந்தான்.
வேறு வழி இன்றி அந்த கோபக்கனலை வருணன் தனது சமுத்திர ஸாஹரத்தில் ஏற்றுக்கொண்டான். முடிவு ஒரு குழந்தை ரூபத்தில் ப்ரதிபலித்தது. நீரின் மேல் மிதந்துவந்த அந்தக் குழந்தை எல்லா லோகங்களும் கேட்குமாறு அலற ஆரம்பித்தது. அந்த அலறலை கேட்கச் சகியாது, ப்ரும்மா தனது கையில் எடுத்து சமாதானப்படுத்த முயற்சித்தார். அலறல் நின்றபாடில்லை. அதன் வடிவம் பெரிதாய் வளர்ந்து கையில் எடுத்து பராமரிக்கும் நிலையில்லாது கனத்தது. மேலும் ப்ரும்மாவின் முகத்தில் உள்ள ரோமத்தைப் பிடித்து இழுத்தது, அவர் கண்களிலேயே கண்ணீரை வரவழைத்தது. அதனால் அந்தக் குழந்தைக்கு “ஜலந்தரன்” என்று பெயரிட்டு அழைத்தார்.

நாட்கள் உருண்டோடின. ஜலந்தரன் வளர்ந்தான். அவன் பலமும் பெருமையும் வேகமாக வளர்ந்தன. தனது வலிமையால் யாரைத் தோற்கடிக்கலாம் என்ற நினைப்பும் கர்வமும் அதிகரித்தது. தேவர்கள் அவன் வலிமையைக் கண்டு தங்கள் பக்கம் சேர்க்க நினைத்தனர். அவனோ அஸுரர்கள் பக்கம் சேர யத்தனித்தான். அவன் திருமண வயதை அடைந்ததும், ராவணனின் தாய் மாமன் காலநேமியின் மகளான விருந்தாவை, மணக்க விரும்பினான். தேவ சபையில் உள்ள அப்ஸர ஸ்த்ரீகள் பொறாமைப் படும் அளவுக்கு அழகு பெற்ற அவள், விஷ்ணு பக்தை. அஸுர குரு சுக்ராச்சாரியார் ஆசியுடன் திருமணம் இனிதே நடந்தது.
வ்ருந்தாவின் விஷ்ணு பக்தியினால் பெற்ற யோக சக்தியினாலும், அவளது பதிவ்ருதை பெருமையாலும், ஜலந்தரனின் பலம் பிறர் அறியாவண்ணம் மேலும் பெருகிற்று. அஸுர குருவினால் அஸுரர்களுக்கு அரசனாக்கப்பட்டான். தேவேந்திரனின் இந்திரபதவியும் பறிபோனது. அவனது வஜ்ராயுதமே செயலற்றுப் போயிற்று. தேவர்கள் அனைவரும் செய்வதறியாது ப்ரும்மதேவரிடம் ஓடினர். ப்ரும்மாவின் தலைமையில் சிவனிடம் சென்று முறையிட்டனர்.
 
தேவர்களின் கோரிக்கைகளை ஒப்புக் கொண்ட சிவன் ஜலந்தரனிடம் பேச சென்றார். எனினும் ஜலந்தரன் வெளிப்படையாக  மிகவும் கர்வத்துடன் சிவனனை அவமதித்துவிட்டான். துறவியான உனக்கு மனைவி எதற்கு என்று சிவனை ஏளனம் செய்தான். மேலும் சிவனின் சமாதானப் பேச்சினை மறுத்துவிட்டான். தனது சக்தியால் சிவனையும் தேவ கணங்களையும் பூத கணங்களையும் மாயையால் கட்டி விட்டான்.
அத்துடன் நில்லாமல் கைலாயத்திற்கு சிவன் வடிவில் சென்று “நான் ஜலந்தரனை வென்று விட்டேன் என்று பார்வதியிடம் ஏளனமாகப் பேசினான். தனது ஞான த்ருஷ்டியால் எல்லாம் அறிந்த பார்வதிதேவி, தனது கத்தியை கையில் ஏந்தி ஜலந்தரனைக் கொல்ல யத்தனித்தாள். ஜலந்தரன், தான் ஏற்படுத்திய மாய சக்தியாலும், சிவனுடன் போர்புரிந்ததாலும், தனது சக்தி குறைந்ததை அறிந்த அவன் அங்கிருந்து ஒடிவிட்டான். விஷ்ணு அங்கு வந்த போது, தேவி பார்வதி மூலம் நடந்தது அனைத்தும் அறிந்தார்.  சிவபெருமானையே மாயையால் கட்டும் அளவுக்கு அவனிடம் சக்தி எவ்வாறு உருவாயிற்று என்று பார்வதி தேவி, நாரணனை வினவினாள்.  

ஜலந்தரன் ஒவ்வொருதடவை போர் செய்யும் பொழுதும், வ்ருந்தை என்னை பூஜித்தும், தனது பதிவ்ருதா சக்தியாலும் கணவனைக் காப்பாற்றும் சக்தியைப் பெற்றான், என்று நாரணன் பார்வதியிடம் சொன்னார். பார்வதியின் வேண்டுகோளுக்கு இணங்க, ஜலந்தரனின் தோல்விக்கு வழி செய்ய அங்கிருந்து சென்றார். மறுநாள் மறுபடியும் சிவனும் ஜலந்தரனும் சண்டையை தொடங்கினார்கள். வ்ருந்தாவும் தனது நாராயண பூஜையைத் தொடங்கினாள். அப்பொழுது நாராயணன் ஜலந்தரனின் ரூபத்தில் உள்ளே நுழைந்து விருந்தையிடம் “நான் இன்று சிவனை மறுபடியும் வென்று விட்டேன். வெற்றியைக் கொண்டாடுவோம் என்று சொல்லி அவளது பூஜையை நிறுத்திவிட்டார். அச்சமயத்தில் சிவன் ஜலந்தரனின் மார்பில் தனது சூலத்தைச் செலுத்த, ஜலந்தரன் போரில் இறந்தான்.

அந்த சமயத்தில் வ்ருந்தா ஏதோ ஒரு வினோதமான உணர்வை உணர்ந்தாள். தனது பதிவ்ருதா சக்தியினால் எல்லாவற்றையும் அறிந்தாள். அவள் முன் இருந்த நாராயணர் தனது சுய உருவிற்கு வந்தார். அவளது கோபதாபத்தைக் கண்டு திகைத்து நின்றார். “என் முன் கல்லாய் நிற்கின்றாய். ஏன் என் கணவனைக் கொல்ல இந்த நாடகமாடினாய்? ஆகவே நீ கல்லாய் மாறி பூ உலகில் இருப்பாய்” என்று பதிவ்ருதா சக்தியால் நாராயணரை சபித்தாள். விளைவு, நாம் எல்லோரும் பூஜிக்கும் சாளக்ராமக் கல்.
 “தவறுசெய்பனுக்கு உறுதுணையாக இருந்ததால் தான் உனக்கு இந்த துக்கம். மேலும் சிவபெருமானை நிந்தித்ததோடு நில்லாமல், பார்வதி தேவியிடம் தவறாக நடந்து கொண்டதால் ஏற்பட்ட அனர்த்தம்” என்று சொல்லி வ்ருந்தாவை நாராயணர் சமாதானம் செய்தார்.
 
இருப்பினும் தனது பக்தையை ஏமாற்றிவிட்டோமே என்று மனம் வருந்தினார். அதனைக் கண்ட சிவபெருமான் கூறலானார். “ஜலந்தரன் எனது அம்சம். அவன் என்னிடமே மறுபடியும் வந்துவிட்டான். பூவுலகில் கண்டகி நதியில் சாளக்ராமமாக உருவெடுத்து உம்மை பூஜிப்பவருக்கு அருள் வழங்குவீறாக. மேலும் வ்ருந்தா “துளஸீ” என்ற பெயரில் மருத்துவ தாவரமாக எங்கும் பரவி இருப்பாள். துளசி பூஜையில்லாமல் உம்மை பூஜிப்பவரின் பூஜை நிறைவு பெறாது” என்று சிவபெருமான் அருளினார். வ்ருந்தா ஜலந்தரனைப் பிரிந்து வருந்தியதை, தனது அடுத்த அவதாரமான ராமாவதாரத்திற்கு நாரணன் பயன் படுத்திக் கொண்டார். ராவணன் சீதையை சிறை எடுக்க, சீதையைப் பிறிந்து மன உளைச்சலையை அடைந்து அந்த அவதார மகிமையை எடுத்துறைத்தார்.

Friday, January 9, 2015

BHISHMASHTAMI - MAHABHARATHA WAR ENDS

பாணப் படுக்கையில், மரணத்தை எதிர் கொண்டு, பகவான் வாஸுதேவனின் விஸ்வரூபத்தைக் கண்ணுற்ற, பீஷ்ம பிதாமஹர், தைமாதத்தில் சுக்ல அஷ்டமி திதியன்று தனது பூத உடலை விட்டு ஸ்வர்க லோகம் சென்ற நாளாகும். அந்த நாள் வரும் செவ்வாய்க் கிழமை, 27ம் தேதி ஜனவரி மாதம் 2015 ஆகும். அன்று பீஷ்மாஷ்டமி  இந்த நாள் 5114 வருடங்கள் முன் அமைந்ததாகச் சொல்வர். இந்த நாளை மையமாகக் கொண்டு ஸ்ரீமத் பாகவதம் என்ற இதிஹாஸம் தொடங்கி கதை ரூபமாகச் சொல்லப்படுகின்றது. 
வ்யாஸர் சுகருக்கு ஸ்ரீமத்பாகவதத்தைக் கூறிய உத்தியை, இக்காலத்திலும் கதை சொல்லும் விதமாக பயன்படுத்துகிறார்கள். கதையின் முக்கிய சாரமான இடத்திலிருந்து தொடங்கி, ஏனைய உபகதைகளையும், கதையின் போக்கையும் நடுவில் சொல்லி கதைக்கு ஒரு ரூபம் கொடுப்பது என்பது வழக்கம். வ்யாசர் சொல்லிய விதத்தை வழிகாட்டியாகக் கொண்டு பல படைப்புகளை பலர் இக்காலத்திலும் பல மொழிகளிலும் அளித்துள்ளார்கள். இன்றும் இந்த விதம் வழக்கத்தில் உள்ளது.
அனர்த்தோபஸமம் ஸாக்ஷாத் பக்தியோகமதோக்ஷஜே
லோகஸ்யாஜானதோ வித்வாம்ஸ்சக்ரே ஸாத்வத ஸம்ஹிதாம்
யஸ்யாம் வைஸ்ரூயமாணாயாம் க்ருஷ்ணே பரம புருஷே
பக்திருத்பத்யதே பும்ஸ: ஸோஹமோஹபயாபஹா
ஸ ஸம்ஹிதாம் பாகவதீம் க்ருத்வானுக்ரம்ய சாத்மஜம்
ஸூகமத்யாபயாமாஸ நிவ்ருத்தி நிரதம் முனி
ஸ்ரீமத்பாகவதம் 1-7-6,7,8
ஸ்ரீவாஸுதேவனிடத்தில் செய்யப்படும் பக்தியோகமானது நேரிடையாகவே இந்த ஜீவனுக்கு ஏற்படும் கஷ்டத்தைத் போக்குவது எனக் கண்டுகொண்டு, இந்த உண்மையை அறியாத மக்கட்கு “ஸ்ரீமத்பாகவதம்” என்ற கதையைச் செய்தார். ஜனங்களுக்கு, எந்தப் பாகவதக் கதையானது கேட்கப்பட்ட பொழுதினிலேயே, துக்கம் மோஹம் பயம் என்ற மூன்றிலிருந்து விடுபட்டு,  க்ருஷ்ண பகவானிடத்தில் பக்தியானது ஏற்படுகிறதோ, அதனை வயாஸ பகவான் செய்தும், பரிசோதனை செய்தும், முற்றும் துறந்த தனது புதல்வன் ஸுகருக்குக் கற்பித்தார். அந்த ஸுகர் எவ்வாறு பாகவதத்தைச் சொன்னார். த்வாபரயுகத்தின் அந்திமப் பகுதிக்கு நம்மை கொண்டு செல்கிறார்.
பதினெட்டு அக்ரோணி சேனையில் இருந்த ஏனைய வீரர்களும் கௌரவரகள் பாண்டவர்கள் யுத்தத்தின் பொருட்டு வீர சுவர்க்கத்தை அடைந்தபொழுது, பீமனால் தாக்கப்பட்டு துடைகள் முறிந்து மரணத்தை எதிர் நோக்கியுள்ள துர்யோதனை மகிழ்விக்க அஸ்வத்தாமன் என்ற நித்ய சிரஞ்சீவி, தூங்குகின்ற த்ரௌபதியின் குழந்தைகளது தலைகளை வெட்டி எடுத்துச் சென்று துர்யோதனிடம் காண்பிக்கிறான்.
ஆனால் துர்யோதனனுக்கே அச்செயல் நிந்திக்கத்தக்கதாய் இருந்தது. இந்தச் சம்பவத்தைக் கண்ட த்ரௌபதியை சமாதானப் படுத்த அர்ஜுனன், அஸ்வத்தாமனைக் கொல்வதாகச் சொல்லி, வாஸுதேவனுடன் ரதத்தில் ஏறி அவனைத் தொடர்ந்து வேகமாகச் செல்லுகின்றான். ருத்திரனிடத்தில் பயத்தால் ப்ரும்மா மிருகமாக மாறி ஓடினது போல் அஸ்வத்தாமா ஓடுகின்றான். அஸ்வத்தாமாவின் ரதக் குதிரைகள் களைப்படைந்து நின்றுவிட்டது. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள உடனே ப்ரும்மாஸ்திரத்தை ஜபித்து அதனை ஏவ நினைத்தான். அந்த அஸ்திரத்தை அடக்கும் உபாயத்தை அறியாத அவன், தன் உயிருக்குப் பயந்து, அந்த திவ்ய அஸ்திரத்தைப் ப்ரயோகித்தான்.
இந்த ப்ரும்மாஸ்திரத்தின் சக்தியைக் குறைக்கக் கூடிய அஸ்திரம் ஒன்றும் கிடையாது. ஆகையால் அந்த அஸ்திரத்தை நீயும் ப்ரயோக செய் என்று வாஸுதேவன் சொல்ல, அர்ஜுனன் வாஸுதேவனை வலம் வந்து, பின் மந்திரத்தினை உச்சரித்து பதில் ப்ரும்மாஸ்திரத்தைத் தொடுத்தான். ப்ரளய அக்னியாக அங்கு ஜொலித்தது. ப்ரஜைகளின் கஷ்டத்தையும், லோகங்களின் நாசத்தையும் மனதில் கொண்டு, வாஸுதேவன் அர்ஜுனனை அந்த இரு அஸ்திரங்களையும் திரும்பப் பெற பணித்தார்.
அஸ்திரங்களைத் திரும்பப் பெற்ற பின், அஸ்வத்தாமை, யக்ஞ புருஷன் யாகப் பசுவைக் கட்டி இழுத்துவருவது போல் இழுத்து வந்து, த்ரௌபதியின் முன் நிறுத்தினான். தருமத்தை பரீக்ஷிக்கின்ற ஸ்ரீக்ருஷ்ணனால் ஏவப்பட்டவனாயிருந்த போதிலும், தருமத்தை அனுஷ்டித்து, அர்ஜுனன் அவனைக் கொல்லாது, அஸ்வத்தாமனின் தலையிலுள்ள மணியை கேசங்களோடுகூட கத்தியால் அறுத்தெறிந்தான்.
வபனம் த்ரவிணாதானம் ஸ்தாநாந்நிர்யாணம் ததா
ஏஷஹி ப்ரஹ்மபந்தூநாம் வதோ நான்யோஸ்திதைஹிக:
ஸ்ரீமத்பாகவதம் 1:7:57
முண்டனம் செய்தலும் பொருளைப் பிடுங்கிக் கொள்ளுதலும் அவ்விதமே இருக்குமிடத்திலிருந்து கிளம்பி விடுதலும் என்ற இதேதான் ப்ராமணர்களுக்கு தண்டனை ஆகும். சரீர சம்பந்தமான வேறு எந்த தண்டனையும் இல்லை என்பது அக்கால வழக்கம். அதன் படி அஸ்வத்தாமனை அர்ஜுனன் தண்டித்து அனுப்பினான். பின்பு த்ரௌபதியுடன், பஞ்ச பாண்டவர்கள் இறந்த தங்கள் பிள்ளைகளுக்கு தகனம் மற்றய ஏனைய க்ருயைகளைச் செய்ய விழைந்தனர்.